சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்
அறுபடை வீட்டில் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சாவூர் மாவட்டம் |
அமைவு: | சுவாமிமலை |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சுவாமிநாதர், சுப்பையா
மூலவர் : சுந்தரேசுவரர் தாயார் : மீனாட்சி அம்மன் |
சிறப்பு திருவிழாக்கள்: | வைகாசி விசாகம், கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்
தல விருட்சம் : நெல்லி மரம் தீர்த்தம் : காவிரி தீர்த்தம், சரவண பொய்கை பாடல்கள் : திருப்புகழ், திருமுருகாற்றுபடை பாடியவர்கள் : அருணகிரிநாதர், நக்கீரர் |
உற்சவர்: | சண்முகநாதர் வள்ளி தெய்வானை |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | தமிழர் கட்டிடக்கலை |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
இணையதளம்: | http://swaminathaswamytemple.org/ |
அறுபடைவீட்டில் ஒன்றான நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 6 கிமீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும். இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளதால் இக்கோயிலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில் என்றும் இக்கோயிலை அழைப்பர்.இக்கோவில் அறுபடைவீடுகளில் நான்காவது படைவீடு ஆகும். இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.இக்கோவில் கி.பி 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என நம்பப்படுகிறது, கி.பி 8ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட முதலாம் பராந்தக சோழன் என்னும் சோழ மன்னன் இக்கோயிலை புனரமைத்து விரிவாக கட்டினார்.
பெயர்க்காரணம்
முருகப்பெருமான் இக்கோயிலில் 'தகப்பன்சுவாமி' எனப் புகழ் பெற்று காணப்படுகிறார். குருவாகி இருந்து அருளியதால் குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மற்றோறு பெயர் திருவேரகம் என அழைக்கப்படுகிறது. இறைவன் இங்கு சுவாமிநாதனாக இருப்பதால் சுவாமிமலை என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது. இங்கு சிவன் சுந்தரேசுவரர் தாயார் மீனாட்சி என பெயரில் உள்ளதால் இக்கோயில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது. இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது.[1]
அறுபடை வீடு
முருகனின் அறுபடைவீடுகளில் இதுவும் ஒன்றாகும். தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூல்களைப் படைத்த அருணகிரிநாதர் மற்றும் நக்கீரர் இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் திருப்புகழில் 4ம் திருமுறையில் உள்ளன. [2] கட்டுமலையாக அமைந்துள்ள குன்றின்மீது இக்கோயில் அமைந்துள்ளது. ஐந்து நிலையுடன் கூடிய ராஜகோபுரம் தெற்கு நோக்கியுள்ளது. இத்தலத்தின் தல மரம் நெல்லி மரமாகும். முருகன் சன்னதிக்குச் செல்ல தமிழ் ஆண்டுகள் அறுபதைக் குறிக்கும் 60 படிகளில் ஏறிச்செல்ல வேண்டும். மகாமண்டபத்தில் கொடி மரத்தின் அருகே கண்கொடுத்த விநாயகரான நேத்திர விநாயகர் உள்ளார். உள் சுற்றில் தல விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சரஸ்வதி, நாரதர், வீரபாகு, அகத்தியர், அருணகிரிநாதர் ஆகியோர் சிலைகள் உள்ளன. சுவாமிநாதசுவாமியின் சன்னதிக்கு எதிராக மயிலுக்குப் பதிலாக யானை வாகனம் உள்ளது. இது இந்திரன் அளித்ததாகும். கருவறையில் முருகன் வலது கரத்தில் தண்டம் ஏந்தியபடி ஊறு முத்திரையில் நின்ற நிலையில் அருள் பாலிக்கின்றார்.[1]
கும்பகோணம் சப்தஸ்தானம்
கும்பகோணம் சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில், திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில், தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில், திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில், கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில், மேலக்காவேரி கைலாசநாதர் கோயில் மற்றும் சுவாமிமலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில்(சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்) ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் கும்பகோணம் முதலிடத்தைப் பெறுகிறது. சப்தஸ்தானப் பல்லக்கின் வெள்ளோட்டம் 7 பிப்ரவரி 2016இல் நடைபெற்றது.[3] 21 ஏப்ரல் 2016 மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியைத் தொடர்ந்து 23 ஏப்ரல் 2016 அன்று ஏழூர்ப் பல்லக்குத் திருவிழா என்னும் விழா நடைபெற்றது.[4] விழா நாளில் பல்லக்கு இக்கோயிலுக்கு வந்து சென்றது.
திருவிழாக்கள்
அருகில் உள்ள மற்றொரு முருகன் கோயில்
இக்கோயிலுக்கு அருகேயுள்ள மற்றொரு முருகன் கோயில் ஏரகரம் கந்தநாதசுவாமி கோயிலாகும். கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் பாதையில் மூப்பக்கோயிலிலிருந்து பிரியும் சாலையில், ஆசூர் வாய்க்காலுக்கு மேற்புறம் ஏரகம் சுவாமிநாதசுவாமி கோயில் உள்ளது. [5]
குட முழுக்கு
2015 செப்டம்பர் 9 அன்று காலையில் இக்கோயிலில் ராஜ கோபுரம், மூலவர் விமானம், சுவாமி அம்பாள் விமானம், மற்றும் பரிவார தெய்வ விமானங்களுக்குக் குடமுழுக்கு நடைபெற்றது.[6]
தேரோட்டம்
ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்குப் பிறகு 2015 நவம்பர் 25 அன்று காலையில் இக்கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. [7] [8]
9.9.2015 கும்பாபிஷேகம் படத்தொகுப்பு
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014
- ↑ திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு)
- ↑ கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரசுவாமி கோயிலில் சப்தஸ்தான பல்லக்கு வெள்ளோட்டம், தினமணி, 8 பிப்ரவரி 2016
- ↑ ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் ஏழூர் பல்லக்கு பெருவிழா, மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி, தினமணி, 22 ஏப்ரல் 2016
- ↑ திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014
- ↑ சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் குடமுழுக்கு, தினமணி, 10 செப்டம்பர் 2015
- ↑ கோயிலில் திருத்தேர் வெள்ளோட்டம், 19 நவம்பர் 2015
- ↑ சுவாமிமலையில் தேரோட்டம், 60 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது, 26 நவம்பர் 2015